தமிழ் இனஅழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக குறைந்தது 31 தமிழ் ஊடகவியலாளர்கள் நான்காம் கட்ட ஈழப்போரில் சிறீலங்கா அரசால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
தாம் மேற்கொள்ளும் இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் வெளியுலகிற்கு செல்லாமல் தடுக்கும் நோக்குடன், இனஅழிப்புக்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் சிறீலங்கா அரசால் இலக்கு வைக்கப்பட்டார்கள்.
அதேவேளை, சமகாலத்தில் புலம்பெயர் தேசங்களில் இயங்கிய தமிழ்த் தேசிய ஊடகங்களின் செயற்பாடுகளையும் திட்டமிட்டு முடக்கியது சிறீலங்கா அரசு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்த தமிழ் ஊடகத்துறையை பலவீனப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் வெவ்வேறு தருணங்களில் சிறீலங்கா அரசாலும் அதற்கு சார்பான வெளியக சக்திகளாலும் காலத்திற்குக் காலம் முன்னெடுக்கப்பட்டது.
ஆயினும், தமிழீழ நடைமுறை அரசின் செயற்திறன் மிக்க காலகட்டத்தில் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்புப் போரோடு தமிழர்களின் உரிமைப் போராட்டம் மூச்சடங்கிப் போய்விடும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆதலால், மீண்டும் தமிழ் ஊடகத்துறையை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டது. அது கணிசமான வெற்றியை அவர்களுக்கு வழங்கியது. இதன் வெளிப்பாடே, தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்பாக தமிழ் மக்களை நம்பிக்கையிழக்க வைக்கும் அல்லது தாமாக ஒதுங்கச் செய்யும் கருத்துருவாக்க நடவடிக்கைகள் திட்டமிட்டு தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் பரப்பப்பட்டு வருகிறது.
இத்தகைய செயற்பாடுகளை முறியடித்து, தமிழ்த் தேசியத்தை பலப்படுத்தவும் தமிழ் இனஅழிப்பை வெளிப்படுத்தவும் தோற்றம் பெற்றதே தாரகம். தமிழர் தாயகம் தொடங்கி தரணி எங்கும் பரந்து வாழும் தமிழ் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், உணர்வாளர்களின் ஆதரவோடு அவதரித்துள்ள தாரகம், பூமிப்பந்தெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கான இணைப்பு பாலமாகவும் திகழும்.
-தாரகம் தமிழ்த் தேசிய ஊடகம்